Friday, August 05, 2005

பெற்றோர்கள் எனும் கணவன் - மனைவி





சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி. "Do you think your parents engage in sex?" என்று ஒரு பிஸியான ரோட்டில் நின்று கொண்டிருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தன்னை தாண்டிச் சென்ற, டீன் ஏஜர்களாக தோற்றமளித்த ஆண்களையும், பெண்களையும் கேட்டுக் கொண்டிருந்தார். பலர் "No" என்று சொல்லிவிட்டு விரைந்தனர். சில "Yes" சொன்னவர்களும் செல்வதிலேயே குறியாக இருந்தனர். ஒரு சிலரே நின்று பேசினார்கள். அதில் ஒரு சம்பாஷணை:

நி.ஒ. கேள்வியை கேட்டார்.

17 வயது மதிக்கதக்க பையன்: No

நி. ஒ: ஏன்?

பையன்: Because they are too old

நி. ஒ: How old are they?

பையன்: 40 and 45

அதன் பிறகு 50 வயதிற்கு மேற்பட்ட தம்பதியர்களை பேட்டி கண்டு, தாம்பத்திய உறவு குறித்த ஒரு seminar பற்றி காண்பித்த பிறகு நிகழ்ச்சி முடிந்தது.

அந்த பையனின் பதில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஒரு developed countryல் இருந்து கொண்டு இப்படி ஒரு awareness இல்லாமல் இருக்கிறார்களே என்று. சிங்கப்பூர் ஆசிய கலாச்சாரமும், western influencesசும் சேர்ந்த ஒரு கலவை என்பது தெரிந்ததே. உதாரணமாக பெரியவர்களை uncle, aunty என்று தான் கூப்பிடுவார்கள். இந்த first name basis எல்லாம் பொதுவாக கிடையாது. Public display of affection னும் அரிது. இது போன்ற காரணங்களால் இந்தப் பையன் அறிவிலியாக இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டே சென்ற பொழுது எங்கோ இடித்தது. யோசித்து பார்த்த பொழுது நான் இவனை விட பெரிய மரமண்டையாக இருந்திருக்கிறேன் என்று உறைத்தது.

அப்பொழுது எனக்கு 15 வயது. அண்ணாவும், நானும் ஹாலின் இரு மூலைகளில் உறங்குவோம். தனி அறையெல்லாம் கிடையாது. அப்பா, அம்மாவிற்கு ஒரு அறை, ஒரு கிச்சன் அவ்வளவு தான். அண்ணா என்னை விட 11 வயது பெரியவர். அவருக்கு திருமணம் நடந்தது. மாடியில் ஒரு தனி அறை கட்டி, அதை உபயோகித்தனர் அண்ணனும், அண்ணியும்.

ஹாலில் தனியாக படுத்துக் கொள்ள பயமாக இருக்கிறது என்று சொல்லி 7 வருடங்கள் (22 வயதாகும் வரை!) அம்மா/அப்பாவின் அறையில் நான் தூங்கியிருக்கிறேன் (ஆமாங்க, ஆமாம்!!). ஒரு வினாடி கூட"என்னடா அவர்களுக்கு ஒரு privacy வேண்டாமா?' என்று யோசித்ததே இல்லை. அவர்களும் ஒரு தடவை கூட "ஏன் எங்கள் அறையில் தூங்கி கழுத்தை அறுக்கிறாய்?' என்று கேட்டதாக ஞாபகம் இல்லை.

நம் அப்பா, அம்மாவை அந்த உறவை தவிர நாம் வேறு யாராகவாவது பார்த்திருக்கிறோமா? முக்கியமாக கணவன் மனைவியாக? மேலை நாட்டவர்களைப் போல் அவர்கள் publicஆக physical affection காண்பிக்காததால் நமக்கு அது உறைக்கவே இல்லையா? அல்லது நான் தான் இப்படி இருந்திருக்கிறேனா? அவர்களுக்கு privacy, space போன்ற விஷயங்கள் ஏன் மனதில் தோன்றவே இல்லை?

இன்று அவர்களுக்கு 67 மற்றும் 70 வயது. இந்த முறை இந்தியா போகும் பொழுது இந்த விஷயத்தை ஞாபகப்படுத்தி மன்னிப்பு கேட்க தைரியம் வருமா? சந்தேகம் தான்!

பின்குறிப்பு: இந்த விஷயத்தை எழுதுவதே கொஞ்சம் uncomfortableஆகத்தான் இருந்தது. ஆனால், அது தான் பிரச்சனையே என்பதாலும், இணைய நண்பர்கள் இதை ஒரு ஆரோக்கியமான கண்ணோட்டத்தில் தான் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்ததாலும் தைரியமாக எழுதிவிட்டேன்.

36 Comments:

At 9:11 am, August 05, 2005, Blogger பத்மா அர்விந்த் said...

நிறைய குடும்பங்களில் அம்மா ஒருவருடனும் அப்பா ஒருவருடனும் என்று வயதான காலத்தில் பிரித்து விடுவது இன்னும் வருத்தமான ஒன்று. அவர்களுக்கு தேவையான தோழமைகூட பிள்ளைகளுக்கு(ஆண், பெண் இருவருக்கும்) முக்கியமாக தோன்றுவதில்லை.

 
At 9:13 am, August 05, 2005, Anonymous Anonymous said...

//அவர்கள் publicஆக physical affection காண்பிக்காததால் நமக்கு அது உறைக்கவே இல்லையா? //

இருக்கலாம்.

//அல்லது நான் தான் இப்படி இருந்திருக்கிறேனா? //

எல்லோரும் தான் என்னையும் சேர்த்து

 
At 9:39 am, August 05, 2005, Blogger துளசி கோபால் said...

ரம்யா,

நம்ம பத்மா சொன்னதுதான் நடக்குது. தங்களுடைய வசதிக்காக வயசான
அப்பா அம்மாவைப் பங்குபோட்டுக்கற பிள்ளைகள்தான் அதிகம். உண்மையைச் சொன்னா
வயசான காலத்துலேதானே 'கம்பெனி'வேணும்.

நம்ம கலாச்சாரத்துலே 'செக்ஸ்' ஒரு பாவம்னு ஆகிப் போச்சு. அதுலேயும் வயதுவந்த பிள்ளைங்க
இருக்கும் ஒரு அம்மா கர்ப்பமாகிட்டாங்கன்னா அவ்வளவுதான். அது ஒரு பெரிய
'வெட்கக்கேடு'ன்னு சொல்லி அவுங்க மனசை நோகடிச்சுடுவாங்க. அதுக்குப் பயந்தே
பெற்றோர்கள் விலகி இருக்க ஆரம்பிச்சு அப்படியே இருந்துடறாங்க. சாப்பாடு, தூக்கம் போல
செக்ஸ்ம் உடலோட தேவைன்றதை படிச்சவுங்களுமே புரிஞ்சுக்கிடறதில்லை.

நானும் இதைப் பத்தி பலமுறை யோசிச்சிருக்கேன்.

( ப்ரைவஸி இல்லாத வீடுகளிலும் புள்ளைங்க ஜாஸ்தி! ?)

துளசி.

 
At 10:34 am, August 05, 2005, Blogger மாலன் said...

>>நம் அப்பா, அம்மாவை அந்த உறவை தவிர நாம் வேறு யாராகவாவது பார்த்திருக்கிறோமா?<<

தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள், அம்மாவை அம்மாவாக மட்டுமன்றி ஒரு பெண்ணாகவும் பார்க்கும் முயற்சி.ஒர் அம்மாவின் திருமணத்திற்கு வெளியேயான உறவைப் பேசுகிறது கதை. அதை பாவம் என்று ஓரிடத்திலும் அவர் மறைமுகமாகக் கூடக் குறிப்பிட்டிருக்கமாட்டார். ஆனால் அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது (வீக்லியில் தொடராக வந்தது) அதற்கு வைக்கப்பட்ட பெயர்:Sins of Appu's Mother' அதை மொழிபெயர்த்தவர் ஒரு பெண் என்று ஞாபகம்.

பார்வைகள் எப்படி வித்தியாசப்படுகின்றன?

இந்திய/ தமிழ் மரபில் ஒரு காலகட்டம் வரை செகஸ் குறித்த ஒரு வெளிப்படையான விவாதம் இருந்திருக்கிறது. நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்கள், கோவில் சிற்பங்கள், வாய்மொழி இலக்கியங்களான பாடல்கள்,பழமொழிகள், வச்வுகள் இவையெல்லாம் இதற்கு சான்றுகள். ஆங்கிலோ=சாக்சன் மரபில் செக்ஸ் ஒரு பாவமாகப் பார்க்கப்பட்டது. பைபிள் செகஸை முதல் பாவமாகப் பார்க்கிறது.
ஆனால் பின்னால் இந்திய சமூகங்களில் செக்ஸ் பற்றிய பார்வை மாறியது. மேலை சமூகங்களிலும் மாறியது.
இதற்குப் பல காரணங்கள். நமக்குக் கிடைத்த மேலைக் கல்வி, மக்கள் தொகைப் பெருக்கம், கூட்டுக் குடும்பம் போன்ற்வை. அவர்களுக்கு அவர்கள் சந்தித்த தொழிற்புரட்சி, உலகப் போர்கள் போன்றவை.

நரசிம்மராவ் (அபூர்வமாகப் புன்னகைக்கும் முன்னாள் இந்திய பிரதமர்) ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அதில் நக்ரத்தில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கிப் படிப்பதற்காக வரும் ஒரு சிறுவன், ஓர் இரவு அவர்கள் நெருக்கமாக இருப்பதைப் பார்த்துவிடுகிறான். அப்போது அவன் மனதில் எழும் எண்ணம், ஏன் இவர்கள் இப்படி 'குஸ்தி' போட்டுக் கொள்கிறார்கள்?

நடுத்தெருவில் நின்று இது போன்ற ஒரு கேள்வியைக் கேட்டு பதில் பெறும் சிங்கப்பூர் மீடியாவை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. இன்று இந்தியாவில் தொலைக்காட்சிகளில் இதை ஒரு ஸ்டுடியோ விவாதமாகக் கூட நடத்த முடியாது!
மாலன்

 
At 11:09 am, August 05, 2005, Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

உங்கள் ஆதங்கம் சரியே!

இன்னொன்றும் சொல்ல வேண்டும்.. பிள்ளைகள் என்று வந்து விடும் போது அவர்களின் கவனிப்புத் தான் முன்னிற்கும். அங்கே கணவன் - மனைவி உறவு பின்னுக்குப் போய் விடும் அல்லது (வீட்டாரினால்)போகவைக்கப்படும். கணவன் - மனைவி உறவின் முக்கியத்துவம் பிள்ளைகளுக்கு உணர்த்தப்படுவதில்லை. அம்மா - அப்பாவாக இருப்பதுவே அவர்களின் வாழ்க்கையல்ல என்பது பலநேரங்களில் யாராலும் உணரப்படுவதில்லை.

மூடி மறைத்தே வாழ்ந்து/வளர்கிற நாம் அம்மா -அப்பா என்று மட்டும் அவர்களைப் பார்க்கிறோம். தனி மனிதர்களாய் பரஸ்பர நேசம் கொண்டவர்களாய், எம்மைப்போன்றே ஆசைகள் கோபங்கள் தேவைகள் கொண்ட மனிதர்களாய்ப் பார்ப்பது மிகக் குறைவு.

அப்படிப் பார்க்கப் பழக வேண்டும். முற்போக்காய்ச் சிந்திப்பவர்களுக்கே "Public (physical) affection" ஒரு வேண்டாத செயலாகத் தெரிகிறது. இயல்பாய் பரஸ்பர அன்பு வெளிப்படும் போது நண்பர்கள் கை கோர்த்துக் கொள்வது போல சாதாரணமான, அன்பை வெளிப்படுத்தும் ஒன்றாய், மட்டுமே அதைப் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

 
At 1:40 pm, August 05, 2005, Anonymous Anonymous said...

மாலன்,
நீங்க timesofindia.com வெப்சைட் பக்கம் போகிறதில்லையா??

அப்பப்போ பெரிய பாலியல் புரட்சியே அங்கு நடக்கும்!!

 
At 2:49 pm, August 05, 2005, Blogger ரா.சு said...

நல்ல பதிவு, ரம்யா! நன்றி!

தலைமுறைகள் மாறி வருகையில் தவறு என தள்ளியவைகள் சரியாகி வரும் - வருகிறது.

இந்த விசயத்தை தமிழ் சினிமாவும் பல விதத்தில் கேலியாகவோ[நகைச்சுவையின் பேரில்] அல்லது விரசமாகவோத்தான் படைத்திருக்கிறது. விசு "வீடு மனைவி மக்கள்" படத்தில் நகைச்சுவையையும் தாண்டி அம்மா அப்பாவிற்குமிடையேயான தீராத காதலையும் வற்றாத அன்பையும் விரசமில்லாமல் படைத்திருப்பார்.

 
At 2:49 pm, August 05, 2005, Blogger முகமூடி said...

இதற்கு மற்றொரு காரணம் பொருத்தம் பார்த்து செய்யப்படும் திருமணங்கள் என்று நான் நினைக்கிறேன். பரஸ்பர புரிதலோ அன்போ இல்லாமல் மற்றவர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்தில் 50 சதவீதத்தினர் ஒரு அன்பிருந்தாலும் அது ஒரு Passion என்ற அளவில் இல்லாமல் கடமைக்காகவும் சமுதாயத்திற்காகவும் வாழ ஆரம்பிக்கின்றனர். அதுவும் ஒரிரு குழந்தைக்கு பிறகு இந்த 'கடமை' இன்னும் அதிகம் ஆகிறது. ஒரிரு குழந்தைக்கு பின் எத்தனை பேர் தங்களின் தோற்றத்தில் அக்கரை எடுத்துக்கொள்கின்றனர்... எத்தனை வீட்டில் 'முன்பை போல' வரும்போது ஒரு முழம் பூவோ, வாரமொருமுறை சினிமா பீச்சோ நடக்கிறது... அங்கேயே குறையத்தொடங்குகிறது உடல் ஈர்ப்பு... ஒரு வயதுக்கு மேல் சுத்தமாக நின்றுவிடுகிறது... ஒரு வயதுக்கு மேல் குழந்தைகளின் முன்பு கணவன் மனைவி தோளில் கை போட்டு இருப்பது கூட பாவம் என்பது சமுதாய (ஒவ்வொரு தனிமனிதனும்தான்) பார்வை. குழ்ந்தை மனம் பாதிக்கப்படாலம் என்பது மட்டுமல்ல, அது மற்றவர்களால் கேலியாக பார்க்கப்படும் என்பதும்தான். பெரும்பாலான வீடுகளில் பெரியவர்களுக்கு தனி அறைகள் கூட கிடையாது...

 
At 5:24 pm, August 05, 2005, Blogger Kannan said...

ரம்யா,

ஒரு digression.

//மேலை நாட்டவர்களைப் போல் அவர்கள் publicஆக physical affection காண்பிக்காததால் நமக்கு அது உறைக்கவே இல்லையா?//

இது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இது சம்பந்தமாக வேறு ஒரு விஷயமும் தோன்றுகிறது.

மேற்சொன்ன காரணத்தினாலும் ஆண்-பெண் உடல் ரீதியான வேற்றுமைகள் மனத்தில் இளம் வயதிலேயே ஆழப் பதிக்கப் படுவதாலும் எங்கள் வீட்டிலே ஆண்கள்-பெண்கள் தொட்டுப்பழகுவது இல்லாத வழக்கமாகி விட்டது. 'தொடுதல்' என்பதற்குச் சில பிரத்தியேகப் பலன்கள் இருக்கத்தான் செய்கின்றன. டிஸ்கவரி மாதிரி ஒரு சானலிலே இத்தொடுதல் மனிதருள் ஏற்படுத்தும் பாதிப்புகளை ஒரு மணிநேரம் காட்டினர். அப்போது, நூலகமொன்றில் குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு புத்தகங்கள் கொடுத்தல்-வாங்கலின் போது கை படுமாறு செய்திருக்கின்றனர். கை பட்டவர்கள் உற்சாகமும் தன்னம்பிக்கையும் மிகப் பெற்றார்கள் என்கிற மாதிரியாய்ப் போனது அது...

அன்பு செய்தல், அரவணைத்தல், சாலை கடக்கும்போது கையைப் பிடித்தல், துக்கத்தில் தேற்றுதல் என்று உடல் மூலமாகப் பேசுவது சில நேரம் வாய் வார்த்தைகளை விடவும் அதிகப் பலன் தருவதாயும், வார்த்தைகள் சொல்லமுடியாத உள்ளின் நிலையை எளிதாகப் புரியவைக்கும் தன்மை கொண்டன. ஆனால், இப்போது இயல்பாக இதையெல்லாம் வீட்டிலே நிகழ்த்த முடியவில்லை. காலங்காலமாய்ப் பழகிவிட்ட இந்தப் போக்கில் கைகள் விறைத்துக் கொண்டுவிடுவதல்லாமல், எதேச்சையாக மேலே யாராவது பட்டாலும் விசுக்கென உடலை உள்ளிழுத்துக் கொள்ளும் reflex உம் உடன் வருகிறது.

பெற்றோர்கள் தமக்குள்ளே இயல்பாகத் தொட்டுப் பேசுவது வீட்டிலே ஆரோக்கியமான சூழலை உண்டு பண்ணும் என்று தோன்றுகிறது. இம்மாதிரிக் குடும்பத்தில் வளரும் பிள்ளைகள் மனத்திலே ஆண்-பெண் பேதங்களும், தொடரும் ஆணாதிக்கக் கருத்தாக்கங்களும் பதிவதில்லை என்றும் ஏனோ எனக்குப் படுகிறது. பிரிகேட் ரோட்டில் இளசுகள் ஆண்-பெண் பேதமில்லாமல் இயல்பாக ஒருவரையொருவர் பார்க்கும் போது அணைத்துக் கொண்டு முகமன் கூறிக் கொள்வது ஏதோ ஒரு வகையில் ஆரோக்கியமான போக்காகவே தோன்றுகிறது.

ஊரில் இருக்கும் தொண்ணூறு வயதைத் தாண்டிய பாட்டியின் தாடையைப் பிடித்துக் கொஞ்சியும், அணைத்துக் கொண்டும், அல்லது சும்மா கையைக் கையில் கோர்த்துக் கொண்டும் தான் எப்போதும் பேசுகிறேன். இதை இப்போது மிகவும் இயல்பாகச் செய்ய முடிகிறது.

 
At 8:18 pm, August 05, 2005, Blogger ரவியா said...

//தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள், அம்மாவை அம்மாவாக மட்டுமன்றி ஒரு பெண்ணாகவும் பார்க்கும் முயற்சி//

மாலன், எனக்கும் அந்த நாவலே நினைவிற்கு வந்தது. அக்கால கட்டத்தில் அந்நாவலுக்கு எப்படி வரவேற்ப்பு??


//குழ்ந்தை மனம் பாதிக்கப்படாலம் என்பது மட்டுமல்ல, அது மற்றவர்களால் கேலியாக பார்க்கப்படும் என்பதும்தான்//

இதையே திரைப்படங்களும் கதைகளும் வலியுருத்திகின்றன
!!!

நல்ல பதிவு, ரம்யா! நன்றி!

 
At 8:48 pm, August 05, 2005, Blogger supersubra said...

நான் எவ்வளவோ முறை நினைவு படுத்தி பார்த்தும் என் பெற்றோரின் தனிமை தேவை ஒன்று இருந்ததாக என் நினைவில் இல்லை. 7 பேர் கொண்ட ஒரு நடுத்தர குடும்பத்தில் தனிமை என்பது ஒரு எட்டாக்கனி என்பது இப்பொழுது புரிகிறது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் என் குடும்பத்தில் மூவருமே அவரவர் தனிமையும் தனி மனித சுதந்திரமும் முழுமையாக உணர்ந்து வாழ்கின்றோம்.
ஆனால் இந்த சூழ்நிலை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

இளைய சமுதாயம் தங்களுக்கு எவ்வளவு சுதந்திரமும் தனிமையும் தேவைப்படுகிறதோ அவ்வளவு பெற்றோருக்கும் தேவை என்பதை புரிய வைக்க வேண்டியது யாருடைய கடமை? அதுதான் புரியவில்லை. உங்கள் பதிவு அந்தக்கடமையின் முதல் படியாக இருக்கட்டும்.

வாழ்த்துக்கள்.

 
At 2:08 am, August 06, 2005, Blogger enRenRum-anbudan.BALA said...

ரம்யா,
சிந்திக்க வைத்த ஒரு பதிவு !!! நீங்கள் சொல்வது போல் நம்மில் பலரும் நமது பெற்றோரின் பிரைவசியின் தேவையை புரிந்து கொள்ளாதவராகவே இருந்திருக்கிறோம் !!!

 
At 7:10 am, August 06, 2005, Blogger Ramya Nageswaran said...

அனானிமஸ், பாலா, மஞ்சுளா, ரவியா மிக்க நன்றி.

பத்மா, draj, துளசிக்கா, மாலன், ஷ்ரேயா, ரா.சு, முகமூடி, கண்ணன், சூப்பர்சுப்ரா.. விரிவான உங்கள் பார்வையை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி,

மாலான் ஸார், நான் இன்னும் அம்மா வந்தாள் படிக்கவில்லை. சீக்கிரம் படிக்க வேண்டும்.

நீங்கள் அனைவரும் சொன்ன வேவ்வேறு பரிமாணங்கள் தனிப் பதிவாக போட வேண்டிய, யோசிக்க வேண்டிய விஷயங்கள்.

நம் கலாசாரத்தில் உறவுகளை மனிதர்களாக பார்ப்பதை விட ஒரு pedestalலில் ஏற்றுவதையே நாம் விரும்புகிறோம்.. நீங்கள் சொல்வது போல் திரைப்படங்களில் செய்கிறோம். அதனால் அவர்கள் மனிதர்களாக நடந்து கொள்ளும் பொழுது முகச் சுளிப்பு முதல் இதயம் நொறுங்குவது வரை நடக்கிறது.

 
At 8:26 pm, August 06, 2005, Anonymous Anonymous said...

அன்பின் மூத்த சகோதரிக்கு,

வணக்கம். சிலவற்றை மனதிற்குள் அசைபோட்டு மாள வேண்டியதுதான். உதாரணமாக கணவன் மனைவியின் முதலிரவு.

பேசாமல் இருப்பதே சாலச் சிறந்தது.

 
At 11:39 pm, August 07, 2005, Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

யோசிக்க வைக்கும் பதிவு. இதை தயங்கித்தயங்கி எழுத அவசியம் இல்லை என்பதை இதற்கு வந்த விரிவான மறுமொழிகளை கொண்டு அறியலாம். இது போல சிந்தித்து பாரக்க வேண்டிய பல விசயங்கள் குறித்து தொடர்ந்து எழுதுங்கள்

 
At 4:52 am, August 08, 2005, Anonymous Anonymous said...

நல்ல பதிவு! கவனமாக எழுதியிருக்கிறீர்கள்!

//தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் - Sins of Appu's Mother' அதை மொழிபெயர்த்தவர் ஒரு பெண் என்று ஞாபகம்.//

கொடுமை!!

 
At 6:54 am, August 08, 2005, Anonymous Anonymous said...

It was translated by M.Krishnan
http://www.thinnai.com/pl03020310.html

 
At 3:58 pm, August 08, 2005, Blogger Ramya Nageswaran said...

மூர்த்தி, கருத்துக்கு நன்றி.

ரவிசங்கர், நன்றி. நீங்க சொன்னது சரி. பின்னூட்டங்களில் நண்பர்களின் பல பரிமாணக் கருத்துக்களை பார்த்ததும் எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

தங்கமணி மற்றும் பாண்டி, முதல் முறையாக வந்ததற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

அனானிமஸ், சுட்டிக்கு நன்றி.

 
At 5:35 pm, August 08, 2005, Anonymous Anonymous said...

//It was translated by M.Krishnan
http://www.thinnai.com/pl03020310.html
//

நன்றி Anonymous!

 
At 4:07 am, August 09, 2005, Blogger இராதாகிருஷ்ணன் said...

நல்ல பதிவு!

 
At 6:18 am, August 09, 2005, Blogger Suresh said...

நல்ல அருமையான பதிவு,

நமது சமுதாயத்தில் உள்ள இதுபோன்ற பல விஷயங்களை நாம் சிந்தித்துப்பார்ப்பது கூட இல்லை. நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கலாச்சாரம் என்னும் மாயையை, இது தான் இயல்பு என்று ஏற்றுக்கொண்டு நாம் வாழ்ந்து விட்டோம். உலக அனுபவம் கொடுத்த அறிவில் இப்போது திரும்பிப்பார்க்கும்போது, நமது கடந்த கால நடத்தைகள் பற்றிய நினைவுகள் முகத்தில் அறைகின்றன. நாம் அறியாமையால் செய்த தவறுகள் என்பதால் நம்மை நாமே மன்னித்து விடலாம்.

 
At 6:26 pm, August 09, 2005, Blogger Ramya Nageswaran said...

இராதாகிருஷ்ணன், நன்றி. Zurichலே இருக்கீங்களா? நாங்க ஐந்து வருடங்கள் வாழ்ந்த ஊர்.

நன்றி, சுரேஷ்.. நீங்க சொன்ன மாதிரி இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிற வரை இதைப் பற்றி நான் யோசித்ததே இல்லை..

 
At 5:26 pm, August 10, 2005, Blogger JVC said...

வாழ்த்துக்கள். நான் யோசிக்கவே தயங்கும் விஷயத்தை மிகவும் சாதாரணமாக ஆனால் கனம் குறையாமல் எழுதியிருக்கிறீர்கள்.

 
At 7:29 pm, August 10, 2005, Blogger Ramya Nageswaran said...

மிக்க நன்றி, JVC

 
At 3:00 am, August 11, 2005, Blogger மதுமிதா said...

அன்பு ரம்யா

நல்ல பதிவு.
வெளிநாடுகள் போல் நமக்கு சிறுவயதிலேயே
குழந்தைகளுக்கு தனிஅறை அளிக்கும் பழக்கம் இல்லை வீட்டில் தனிஅறைகள் இருந்தாலும்.
குழந்தைகள் வளர்ந்த பிறகும் அதை அப்படியே தொடர்வதே வழக்கமாகி உள்ளது.

அது தவிர இப்போது வரையிலும் குழந்தையும்,குடும்பமும் மட்டுமே
உலகமாக உள்ள பெண்கள் சதவிகிதம் அதிகம்.
எந்த பெற்றோரும் குழந்தைகள் புரிந்து கொள்ளவில்லையே இவ்விஷயத்தில்
என வருத்தப் படுவதில்லை.மன்னிப்பு கேட்க வேண்டுமென்று விரும்பவும் மாட்டார்கள்.

இவ்விஷயமாய் அவர்கள் யோசித்தும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று
நூறு சதவிகிதம் ஆணித்தரமாய் சொல்கிறேன்.

தள்ளாத வயதின் தனிமைக்கே வருத்தப்படுவர்.

இந்த விஷயங்களை பகிரங்கமாக பேசுவது தவறு என்ற மனோபாவமே பலருக்கும் இருக்கிறது.
நீங்கள் யோசித்த பின்பே பின்குறிப்பிட்டும் வலையில் பதிவு செய்துள்ளீர்கள்.
நானும் யோசனைக்கு பிறகே பதில் எழுதுகிறேன்.
இதுதான் நிதர்சனம்

இப்போதைய தலைமுறையில் தான் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அன்புடன்
மதுமிதா

 
At 1:06 pm, August 11, 2005, Blogger Ramya Nageswaran said...

மதுமிதா, விரிவான கருத்துக்களுக்கு நன்றி..

//இவ்விஷயமாய் அவர்கள் யோசித்தும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நூறு சதவிகிதம் ஆணித்தரமாய் சொல்கிறேன்.//

இருக்கலாம்..அப்படி நினைக்கக் கூடாது என்று அவர்கள் condition செய்யப்பட்டிருக்கிறார்களா? நீங்கள் இப்படி ஆணித்தரமாக நினைப்பதே சற்று unnatural ஆக இருக்கிறதல்லவா?

இதனால் வேறு சில frustrations மற்றும் எரிச்சல்கள் தோன்றுவதற்கு வாய்ப்பிருக்கிறதே?

 
At 1:11 am, October 11, 2005, Anonymous Anonymous said...

Ramya,
thamizhil comment adikkanum-nu aasayaai irukku. aana epdinnu theriyala. adhaan ippadi (mannikkavum).

ungaL blog enakku romba pidithadhu. I love your writing style. Very pertinent topic too. After living in the US, I have become sensitive to my parents' need for privacy.

But this sensitivity is lacking in India, maybe because touch itself has a bad reputation. Even today when I go back home, people talk about older people being "too old" for even a movie out together etc.

I agree with other commenters. Why do people shirk away from expressing affection naturally? Even hugs are forbidden...Luckily, my dad has always hugged my mom or any of us openly when happy, and we never thought anything was wrong about it. And we all grew up to be very open and demonstrative people. I hug everyone in the family and some friends too - even at public places.

But I landed up with a man who thinks even saying "I miss you" in front of the kids is inappropriate. Arrrrghhhh....MAJOR frustration.

Priya.

 
At 9:14 am, November 08, 2005, Blogger Ramya Nageswaran said...

Dear Priya,

I saw your comment only today! Thanks for sharing. In certain families it is alright to express anger in public but not affection!! Hope this changes soon.

 
At 9:38 am, November 08, 2005, Blogger மாதங்கி said...

மிக நல்ல பதிவு ரம்யா;

எனக்குத் தெரிந்த நடுத்தர குடும்பத்தில் இரண்டு மகன்கள். இருவரும் திருமணமானவுடன் பெரிய ஹால் சிறு படுக்கயறைகள் இரண்டு உடைய சொந்த ப்ளாட்டை வாடகைக்கு விட்டுவிட்டு மூன்று சிறு படுக்கையறைகள் ப்ளாட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டார்கள். வயதான அம்மா அப்பாவுக்கு ஒரு தனியறை வேண்டும் என்று.

இதில் சொந்தமெல்லாம் அம்மா அப்பாவுக்கு ஹால் போராதா என்று வேறு முணுமுணுப்பு. எப்படி இருக்கு பாருங்கள். ஆனால் பிள்ளைகள் கண்டுகொள்ள வில்லை.

 
At 11:57 am, November 08, 2005, Blogger மாதங்கி said...

மன்னிக்கவும் படுக்கையறை என்பதை படுக்கயறை என்று தவறாக தட்டச்சு செய்துவிட்டேன்.

 
At 12:40 pm, November 08, 2005, Blogger Ramya Nageswaran said...

கருத்துக்களுக்கு நன்றி, மாதங்கி. உங்களை பற்றி ஜெயந்தி நிறைய சொல்லியிருக்காங்க...ஒரு நாள் சந்திப்போம்!

 
At 1:06 pm, November 08, 2005, Blogger மதுமிதா said...

ரம்யா
இப்பதான் பார்த்தேன்

ஏன்னா அப்பல்லாம்
இப்போது போல வெளிப்படையா எதுவும் பேசப்படல.
அதனால அந்த விழிப்புணர்வு தேவைன்னு அவங்களே நினைக்கல.

நினைக்கக்கூடாதுன்னு கண்டிஷன் செய்யப் படவில்லை.
நினைவே தோன்றாத அளவில் சமுதாயமே கண்டிஷன் செய்யப்பட்டிருந்த காலம் அது

அந்தக்காலம் வேற.திருமணமான மூன்று வருடங்களுக்குப் பிறகு,இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு முழுசாக கணவனின் முகம்
பார்த்த பெண்கள் இருந்த காலம் அது.அதனால் சொன்னேன்.

///நீங்கள் இப்படி ஆணித்தரமாக நினைப்பதே சற்று unnatural ஆக இருக்கிறதல்லவா?///
நான் natural-ஆ சொல்லியிருக்கிறேன்
அவர்கள் unnatural-ஆ வாழ்ந்த காலம் அது.

 
At 1:32 pm, November 08, 2005, Blogger Ramya Nageswaran said...

//நான் natural-ஆ சொல்லியிருக்கிறேன்
அவர்கள் unnatural-ஆ வாழ்ந்த காலம் அது.//

இப்ப புரிகிறது நீங்க என்ன சொல்ல வந்தீங்கன்னு...நன்றி மது.

 
At 1:44 pm, November 08, 2005, Blogger ramachandranusha(உஷா) said...

அம்மா வந்தாளை விட இந்த சப்ஜெட்டில் ஜெயகாந்தனின் ஒரு சிறுகதை ( பெயர் ஞாபகமில்லை), பேரன் பேத்தி எடுத்த
அம்மாள், பிள்ளையுண்டாகிவிடுவாள். எல்லாரும் கேலி பேசுவதை தாங்காமல் தற்கொலைக்கு முயன்று, இன்னொரு மகன் மேல் நாட்டு பெண்ணை மணந்தவன், காப்பாற்றி தன்னுடன் கூட்டிக் கொண்டுப் போவார். அந்த மருமகள் தாய்மையைப் போற்றுவாள். அவளுக்கு பிள்ளையுண்டாகும் தகுதியில்லை என்று நினைக்கிறேன் ... சரியாக ஞாபகம் இல்லை.
அம்மா வந்தாள்... ¦Àñ½¢ý எக்ஸ்ட்ரா மாரிடல் அப்பேர்ஸ் கருத்தை நாசுக்காய் சொல்லப்பட்ட கதை. ஆனால் அந்த தவறுக்கு
பிரயாசித்தமாய் ஒரு மகனை வேதம் படிக்க அனுப்பியும், கடைசியில் காசிக்குப் போய் பாவம் தீர்ப்பதாகவும் சொல்லப்படும்.
தம்பதியருக்கு வயதான காலத்திலும் தனிமை வேண்டும். கடைசி காலத்தில் இணைந்து இருக்க வேண்டிய அவசியத்தை
சொன்னப்படம் ஒன்று செளகார் ஜானகி, ஜெமினி கணேசன் நடித்தது... பெயர் என்ன?
நல்ல பதிவு ரம்யா. நல்லவேளை இப்பொழுதாவது கண்ணில் பட்டதே!

 
At 2:02 pm, November 08, 2005, Blogger dondu(#11168674346665545885) said...

"கடைசி காலத்தில் இணைந்து இருக்க வேண்டிய அவசியத்தை
சொன்னப்படம் ஒன்று செளகார் ஜானகி, ஜெமினி கணேசன் நடித்தது... பெயர் என்ன?"

படம் ஸ்கூல் மாஸ்டர். சமீபத்தில் 1974-ல் வந்தது. இதே படத்தின் ஹிந்தி ஆக்கத்தில் சிவாஜி அவர்கள் ஒரு துணை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At 2:28 pm, November 08, 2005, Blogger Ramya Nageswaran said...

உஷா, விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி. நானும் 'அம்மா வந்தாள்' சமீபத்தில் படித்தேன். நீங்க சொல்லியிருக்கிற கதை இந்த விவாததிற்கு எற்ற கருவாக தோன்றுகிறது.

டோண்டு சார், தகவலுக்கு நன்றி.

 

Post a Comment

<< Home