அன்புத் தோழி! உனக்காக கொஞ்ச நேரம்.....
சமீபத்தில் என் உறவினர் ஒருவருக்கு நடந்த சம்பவம் இது. கல்லூரிப் படிப்பை முடித்த மகன் படிப்பைத் தொடர வெளிநாட்டுக்கு செல்ல முடிவு செய்கிறான். அம்மாவால் மகனின் பிரிவை தாங்க முடியவில்லை. மகனை அனுப்பி வைத்துவிட்டு மன அழுத்தத்தாலும், மன உளைச்சலாலும் அவதிப்படுகிறாள் தாய். சிறிது நாட்களில் இது மனநிலை பாதிப்பாகவே மாறி மன நல மருத்துவரின் உதவியை நாடும் அளவிற்குப் போய் விட்டது.
இது ஒரு extreme example தான் என்றாலும் யோசித்து பார்த்த பொழுது பொதுவாகவே நமது குடும்ப சூழலில் திருமணம் ஆனவுடன் மனைவியின் திறமைக்கோ, படிப்பிற்கோ அல்லது வேலைக்கோ கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விட கணவனின் வேலைக்கும், ஈடுபாடுகளுக்கும் தான் அதிக முக்கியத்துவம் என்பது தெரிந்தது தான்.
ஒரு குழந்தை பிறந்து விட்டால் கேட்கவே வேண்டாம். ஏற்கனவே உடல் ரீதியாக பல பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளும் கட்டாயத்தில் ஒரு தாய் இருக்கிறாள். அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் முக்கிய பொறுப்பு அவளுக்கு தான் அதிகம் வருகிறது.
என் தோழி ஒருத்தி திருமணத்திற்கு முன் நல்ல பரத நாட்டியக் கலைஞராக இருந்தார். கணவன் அவளிடம் “எனக்கு பரதம் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் நீ தொடர்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை” என்றான். ஆட்சேபிப்பது என்பது வேறு ஒத்துழைப்பது என்பது வேறு. குடும்ப பொறுப்புக்களிலும், வீட்டை நிர்வகிப்பதிலும், குழந்தை வளர்ப்பிலும் கணவன் பங்கேற்கவே இல்லை. அதனால் தன் நடனக் கலையை தொடர முடியாத நிலையில் இருக்கிறாள் என் தோழி. தற்பொழுது தன் ஆக்கப்பூர்வமான உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாக தன் ஒரே மகளை வளர்பதில் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறாள். மகளுக்கு பல விதமான கலைகளை கற்றுக் கொடுக்கிறாள். அந்த மகள் தன் சொந்தக் காலில் நிற்க ஆரம்பித்துவிட்டால் இந்த தாயின் உலகில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்படும் வாய்ப்பு நிச்சயமாக உள்ளது.
நான் பார்க்கும் பல பெண்கள் தங்கள் திறமைகளையும், ஆசைகளையும் மூட்டை கட்டி வைத்து விட்டு கணவனுக்கு சேவை செய்வதிலும், குழந்தை வளர்ப்பதிலும் முழு கவனமும் செலுத்துகிறார்கள். தான் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமே அந்த குழந்தையை ஒரு பெரிய ஆள் ஆக்குவது தான் என்று நினைக்கும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். மகன்/மகளுக்கு பாடம் சொல்லித்தருவது, பிடித்ததை விதம் விதமாக சமைத்துப் போடுவது, பள்ளி தவிர பாட்டு, நடனம் போன்ற கலைகளை கற்றுக் கொடுப்பது என்று நேரம் போவதே தெரியாமல் வருடங்கள் ஓடி விடுகின்றன.
மகளோ மகனோ வளர்ந்து சுயமாக உலகை தெரிந்து கொள்ள மேல்படிப்பிற்காக வேறு ஊருக்கோ அல்லது நாட்டுக்கோ சென்று விட்டால் இந்த தாயின் உலகம் சூன்யமாகி விடுகிறது. தன் வாழ்க்கைக்கு குறிக்கொளே இல்லை என்பது போல் அவள் செயல்படுகிறாள்.
சரி! இதை எப்படி தடுப்பது? சில உற்சாகமான பெண்களை நான் கவனித்திருக்கிறேன். அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? இந்த சூழ்நிலை ஏற்படுவதற்கு முன் உங்களை மன ரீதியாகவும், அறிவுப்பூர்வமாகவும் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். தனக்கென்று தனித்துவத்தோடு ஈடுபட ஒரு விஷயம் இல்லாமல் இருப்பது தான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.
உங்கள் கணவன் மற்றும் குழந்தைகளுடன் கலந்து பேசி, ஒரு நாளைக்கு உங்களுக்காக என்று ஒரு பகுதியை ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் உங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ளலாம், ஏதாவது புதிய விஷயத்தை கற்றுக் கொள்ளலாம், உடல் பயிற்சி செய்யலாம், அல்லது தோழிகளுடன் வெளியே செல்லலாம். திருமணத்திற்கு முன் தனக்கிருந்த நல்ல தோழிகளுடன் தொடர்பை நீடிப்பதே சிலருக்கு பெரும் கஷ்டமாக போய்விடுகிறது. கணவரின் நண்பர்கள், மற்றும் குழந்தைகளின் நண்பர்களின் குடும்பங்கள் என்று உறவுகள் மாறி விடுகின்றன. கூடிய மட்டும் பள்ளி/கல்லூரித் தோழிகளோடு தொடர்ப்பு வைத்துக் கொண்டால் சமயத்தில் தோள் கொடுக்க ஒரு தோழி இருப்பாள்.
ஏதாவது ஒரு நல்ல விஷயத்தில் மனதை செலுத்துங்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் செய்ய முடிந்தால் அதிர்ஷ்டம். இல்லையேன்றால் விடா முயற்சியுடன் தொடருங்கள். உங்களின் உற்சாகத்தை பார்த்து அவர்கள் நிச்சயம் ஒரு நாள் உங்களை ஊக்குவிப்பார்கள். உங்கள் குழந்தை பெரியவனாகி யாரையும் சார்ந்து இல்லாமல் இருந்தால் அது உங்களுக்கு கிடைத்த வெற்றியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்காகவும் வாழ ஆரம்பியுங்கள். அப்பொழுதுதான் பிறருக்காக வாழும் நாட்கள் பிற்காலத்தில் ஒரு சுமையாக மாறாது.